விநயன்



அடித்த போதும் அணைக்கிறாய்
எனக்கு வலித்தாலும் துடிக்கிறாய்
கர்த்தரின் புது கவிதை நீ !

கொடுத்தாலும் சிரிக்கிறாய்
எடுத்தாலும் சிரிக்கிறாய்
கீதையின் சிறு உருவம் நீ !

எதிலும் சந்தோசம் காண்கிறாய்
அனைவரிடமும் அதை பகிர்கிறாய்
புத்தரின் புத்துயிர் நீ !

குழந்தையும் தெய்வமும் வேறில்லை
இனியும் நான் நாத்திகனில்லை !
 
 
கற்றுக்கொடுக்க ஒன்றுமில்லை உனக்கு
உன்னிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் !!



பே(போ)தை மனம்





இந்த நொடியின் ஆனந்தத்தை விட்டுவிட்டு

நேற்றைய வலியிலேயே இன்றும் உழல்கிறது

நாளைய ஆனந்தத்தை தேடி அலைகிறது

சந்தோசத்தின் தேடலிலியே நாட்களை கடத்துகிறது



எதிலுமே திருப்தி கொள்ள மறுக்கிறது

இல்லாத ஒன்றிற்காகவே ஏங்குகிறது

காலடியில் கிடக்கும் சொர்க்கம் தவிர்த்து

வான் நோக்கி பறந்து கொண்டிருக்கிறது



உடல் ஓய்ந்தாலும் ஓயாது துடிக்கிறது

உயிரின் கடைசி துளியை பருகியும்

தாகம் தணியாது தவிக்கிறது

தீரா பசிகொண்டு அலைகிறது