உனக்கும் கீழே இருப்பவர் கோடி (சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது )

இரவு பத்து மணி இருக்கும் , சந்தியாவும் அவள் தாய் சரஸ்வதியும் இரண்டு கைகளிலும் பெட்டிகளை தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க அந்த இரயில்வே நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள் . அந்த அவசர நடையிலும் சந்தியா விடாது அவள் தாயிடம் படபடத்துக்கொண்டிருந்தாள் .
" அன்னிக்குகூட அப்படிதான் என் ப்ரெண்டு ஊர்ல இருந்து வந்திருக்கா , அவள நாளைக்கு பார்க்க போறேன் னு சொன்னேன் அவ்ளோ தான் , நீ தான் முடிவெடுதுட்ட ல அப்புறம் எதுக்கு இந்தத்தகவல் மட்டும் சொல்லிக்கிட்டு ,புருஷன மதிக்கறது இல்ல னு சொல்ல ஆரம்பிச்சுட்டார் "
"...."
"இப்போ நம்ம வீட்டுக்கு வரணும்னா கூட ஆயிரத்தெட்டு தடவ அனுமதி கேட்கணும் , அம்மா அப்பாவ பார்க்க காரணம் தேட வேண்டியதா இருக்கு"
"...... "
" அப்பப்போ நான் கருப்பா இருக்கேன் னு கிண்டல் செஞ்சு சிரிப்பாங்க எல்லாரும், அத வேற சகிச்சுக்க வேண்டியிருக்கு "
"....."
" ஏன் தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் னு இருக்கு "
" சும்மா போட்டு குழப்பிக்காத , எல்லாம் சரியாயிடும் , இரயில் வந்திருச்சு பாரு பெட்டி எடு " என்றாள் சரஸ்வதி .
அவளை விட ஒரு பெரிய புலம்பலோடு அந்த புகை வண்டி அவர்கள் அருகில் வந்து நின்றது . சந்தியா, அவளின் இருக்கையின் இடம் நோக்கி நகர்ந்தாள் . சந்தியாவின் இடத்தில ஒரு பாட்டி அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு ,
" இது என் சீட் உங்க சீட் நம்பர் என்ன "
"அவங்களுக்கு நடு சீட் கொடுத்திருக்காங்க , அவங்களால அங்க ஏற முடியாது , நீங்க சீட் மாத்திக்கரிங்களா ? " என்றது ஒரு குரல் .
குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள் சந்தியா , சிறிது நேரம் இமைக்காமல் நின்றது அவள் விழி. ' பௌர்ணமி முகம் ' என்றெல்லாம் கவிஞர்கள் பாடுவது இந்த அழகை தானா. சிறிது நேரம் அவளை மறந்து இரசிக்கலானாள் .
மறுக்கவே தோன்றாமல் "சரி அவங்க படுத்துக்கட்டும் " என்று சொல்லி நடு சீட்டில் அவள் பெட்டிகளை வைத்து ஜன்னலோரம் நிற்கும் தாய்க்கு கை அசைத்தாள் .
" ஊருக்கு போய்ட்டு போன் பண்றேன் " என்று சொல்லி கை அசைக்க அந்த இரயில் வண்டியும் உடம்பசைத்து நகர ஆரம்பித்தது .
தன் சீட்டிற்கு வந்து படுத்தவளிடம் , புன்னகையோடு அந்தப்பெண்
" என் பேரு ஜனனி , தேங்க்ஸ் சீட் மாறி ஹெல்ப் பண்ணதுக்கு ,தனியா தான் ஊருக்கு போறீங்களா "
"உம்"
" உங்க கூட வந்தவங்க யாரு, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ? "
" உம் . என் அம்மா அவங்க , சென்னை ல தான் என் வீடு"
" வேலைக்கு போறீங்களா "
"ஆமாம் , சாப்ட்வேர் என்ஜினீயரா இருக்கேன் "
" உங்க வீட்டுக்காரர் ? "
"அவரும் சாப்ட்வேர் என்ஜினீயர் தான் "
" அப்படினா சூபர் ல "
"என்னத்த சூப்பர் , பார்த்துக்க கூட நேரமில்லாத ஓட்டம் தான் , அப்டி அலைஞ்சு வேலை பண்ணாலுமே ஒன்னும் பெருசா நிக்கறது இல்ல "
வங்கியில் இருக்கும் 5 இலட்ச ருபாய் கடனை நினைக்கவே தலை சுற்றியது சந்தியாவுக்கு .
"என் வீட்டுக்காரர் பெரிய தொழிலதிபர் , மாடர்ன் டெக்னாலஜி கேள்விபட்டீர்கிங்களா அது எங்களோடது தான் . நல்ல பிரபலம் , நான் நுட்ரிசென் அண்ட் டயடிசியன் படிச்சேன் , ஆனா என்ன கட்டிக்கொடுத்த வீட்ல வேலைக்கு போக கூடாது னு சொல்லிட்டாங்க , வீட்ல சும்மாதான் இருக்கேன் இப்போ "
"வேலைக்கு போகலைனா என்ன , உங்க கலையை வீட்ல காமிக்கலாமே "
ஆறுதல் படுத்துவதாய் நினைத்து சொன்னால் சந்தியா .ஆனால் பெருமூச்சு விட்டால் ஜனனீ.
"எங்க வீட்ல யாரும் என்ன மதிக்கமாட்டாங்க , ஏன் என் பசங்களே நான் சொல்றத கேட்கமாட்டாங்க , பாருங்க என் பையன் எவ்ளோ குண்டயிருக்கான் ன்னு "
" மதிக்கறதும் இல்ல , என்ன தனியா எங்கயும் வெளிய விடறதும் இல்ல , பாருங்க இந்த பசங்கள லீவ் கு ஏற்காடு ல இருக்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வர இந்த பாட்டிய என் துணைக்கு அனுப்ச்சிருக்காங்க . பேருக்கு தான் நான் பெரிய வீட்டு மருமக , வெற்றிகரமான காதல் திருமணம் எல்லாம் அதோட விலை என் சுதந்திரம் னு அப்போ தெரியல "
அவளுக்கு துணையாக அனுப்பிய பாட்டிக்கு தான் துணை தேவைப்பட்டிருந்தது . இதற்கு சந்தியாவாள் எதுவும் சொல்ல முடியவில்லை ,
" ஏற்காடு எப்படி இருந்தது , நல்ல இருந்ததா " என்று மட்டும் கேட்டு வைத்தாள்
"ஹ்ம்ம் நல்லா இருந்திச்சு இந்த குழந்தைங்க தான் நல்ல ஆட்டம் போட்டுச்சு "
" என் வாழ்க்கை இப்டி ஆகும் னு நான் நினைக்கலை , என்ன தான் சுதந்திரம் சதவிகிதம் னு பேசினாலும் அடுப்படி தான் நமக்கு , நான் வீட்ட விட்டு கடைக்கு கூட தனியா போனதில்ல எல்லாத்துக்கும் ஒரு ஆள் துணைக்கு வருவாங்க "
"ஆனா நானும் வீட்ட விட்டு வெளிய எடத்துக்கு வரணும் னு ஆசை படறேன் ,எவ்ளோ நாள் தான் வீட்டுக்குள்ளயே இருக்கறது "
பதில் எதிர்பாராமல் பேசிக்கொண்டேயிருந்தாள் ஜனனீ .
"ஹ்ம்ம் , சரி தான் " என்று சொன்ன சந்தியாவிற்கு தன் சுதந்திரம் இப்பொழுது தான் புரிய வந்தது . தான் வேலைக்கு போவது , வெளிஇடங்களுக்கு சுதந்திரமாய் சுற்றுவது , விரும்பியதை வாங்குவது என்று தானே இருக்கிறாள் . தாய் வீடு மீது கணவன் காட்டும் வெறுப்பு மட்டும் தானே அவளை கலங்கவைத்துக் கொண்டிருந்தது . தன்னையும் அறியாமல் கண்மூடியவள் அப்பொழுதுதான் பல உண்மைகளை அறியலானாள்.
இரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் , ஜனனீ யை கூட்டிச்செல்ல அவன் கணவன் வந்திருந்தான் . எத்தனை புலம்பி இருந்தாலும் அவனை பார்த்ததும் மலராய் மலர்ந்தாள் , சிரித்துக்கொண்டே அவனோடு நடை இட்டாள் .

சந்தியா தனது வீட்டுக்குள் நுழைந்ததும் ,
" வண்டி லேட்டா " என்றாள் அத்தை
"ஆமாம் அத்த " சொன்னவள் விழி பாஸ்கரனை தேடியது . உணர்ந்தாள் போல் வந்த பாஸ்கரன் சந்தியாவை சலனமற்ற பார்வையில் பார்த்தான். மெல்லியதாய் புன்னகித்தாள் சந்தியா .
அன்று அலுவலகம் சென்ற சந்தியா , மெல்ல வேலைகளை கவனிக்கலானாள் .
"சந்தியா , டி சாப்பிடலாம் வா " என்று பூஜா அழைத்தாள்
" ஏன்தான் கல்யாணம் செஞ்சிகிட்டோம் னு இருக்கு டி " என்று ஆரம்பித்த பூஜாவை பார்த்து , புன்னகையோடு பாடலானாள் சந்தியா
" உனக்கும் கீழே இருப்பவர் கோடி ,நினைத்து பார்த்து நிம்மதி தேடு !"